நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ 2 ½ லட்சம் மோசடி செய்தநபர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் நடேசன் என்பவரது மகனுக்கு கடந்த 2018ம் ஆண்டில் திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இருந்து இளநிலை உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை வந்துள்ளது. இதையறிந்த மேற்படி நடேசன் என்பவருக்கு தெரிந்த திருநெல்வேலி பிருந்தாவன் நகரை சேர்ந்த முத்தையா மகன் பேச்சியப்பன் (எ) கண்ணன் (67) என்பவர் இளநிலை உதவியாளர் பணிக்கு டெபாசிட் பணம் ரூபாய் 3 லட்சம் கட்டினால்தான் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மேற்படி நடேசன் அவரது உறவினரான மகேஷ் என்பவரின் தூத்துக்குடியிலுள்ள வங்கி கணக்கிலிருந்து 2019ம் ஆண்டு ரூபாய் 3 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் நடேசனின் மகனுக்கு வேலை கிடைக்காததால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி ரூபாய் 2 ½ லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்ததாக திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் வசம் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.பிரவேஷ் குமார் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் தலைமை காவலர் மாரிமுத்து ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரி பேச்சியப்பன் (எ) கண்ணன் என்பவரை திருநெல்வேலி பிருந்தாவன் நகரில் வைத்து இன்று கைது செய்தனர்.
Tags :