சேலம் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 27 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைப்பு 

by Editor / 27-05-2023 08:41:26pm
சேலம் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 27 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைப்பு 

தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் போலி மது வாங்கி குடித்த 2 பேர் பரிதமாக உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இதன் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி, கலால் உதவி ஆணையர் மாறன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்  செல்வி ஆகிய கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 அந்த வகையில் சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள பார் மற்றும் சேலம்  புதிய பஸ் நிலையம், 
நெத்திமேடு, கொண்டலாம்பட்டி ,கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் டாஸ்மாக் நிர்வாகத்திடம் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

 இதுபோல் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட புறநகர் பகுதியில் 14 டாஸ்மாக் பார்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல்  செயல்பட்டு வந்த 27 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

மேலும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

இவ்வளவு நாட்கள் டாஸ்மாக் மார்க்கெட் அனுமதி பெற்றார்களா? இல்லையா என கண்காணிக்காத டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை .

 

Tags :

Share via