2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

by Staff / 15-07-2023 04:01:20pm
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, மிகுந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் கணவர் தனசேரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சசிகலா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார்.

பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, இன்று காலை சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வெட்டுக்கட்டு புதூருக்கு விரைந்து வந்தார். சசிகலாவை வீட்டில் பார்க்க முடியவில்லை. குழந்தைகளையும் காணவில்லை. இதனால் மகள் மற்றும் பேரன்களை தேடி, பழனிச்சாமி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து, கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், சசிகலாவை தண்ணீருக்குள் இருந்து மீட்டு வெளியே எடுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் மாவட்ட வழங்க அலுவலரும், திருச்செங்கோடு உதவி கலெக்டருமான (பொறுப்பு) ரமேஷ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via