போதையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

by Staff / 19-08-2023 12:48:56pm
போதையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கும், ஆற்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், என்பவருக்கும் திருமணம் நடந்து, இரு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது பிரசவத்திற்காக தன் தாய் வீட்டுக்கு சென்ற முனியம்மாள், ஓராண்டாக அங்கேயே தங்கியுள்ளார். கணவருக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளதால், புகுந்த வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், புருஷோத்தமன் குடித்து விட்டு, ஆற்பாக்கத்திற்கு சென்று, அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அதே போல, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் மது போதையில் சண்டை போட்டுள்ளார். பின், அங்கிருந்த ஒயரால், முனியம்மாள் கழுத்தை இறுக்கியுள்ளார். பின், கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முனியம்மாவை, வீட்டில் வைத்து பூட்டி விட்டு, தன் ஒரு வயது குழந்தையை துாக்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள், புருஷோத்தமன் உடையில் இருந்த ரத்தக்கறையைப் பார்த்து சந்தேகப்பட்டு, அவரை விசாரித்துள்ளனர். பின், பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் முனியம்மா இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆவேசம் அடைந்த அப்பகுதியினர், புருஷோத்தமனை சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். மாகரல்போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, பின், சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via