ஷோரூமில் மின்சார பைக் எரிந்து நாசம்

by Staff / 16-09-2023 02:24:58pm
ஷோரூமில் மின்சார பைக் எரிந்து நாசம்

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மின்சார இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் 25 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பற்றியது. இதை அங்கிருந்த ஊழியர்கள் கவனித்து தீயை அணைக்கை முயன்றனர். அதற்குள் தீ வாகனம் முழு வதும் மளமளவென பரவியது. அருகில் இருந்த மற்ற இருசக்கர வாகனங்களை ஊழியர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் சேதமானது. மற்ற வாகனங்கள் தப்பியது. இந்த விபத்தில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இருசக்கரவாகன ஷோரூமில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்ததும் ஊத்துக்குளி ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர். இதனால் ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷோரூமில் நிறுத்தியிருந்த மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via