கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
கும்பகோணம் வட்டம், காரைக்கால் சாலை விவேகானந்த நகரைச் சேர்ந்தவர் அர்ஜூன் கார்த்திக் (45). இவர் அப்பகுதியில் கிரிப்டோ கரன்சி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், 18 மாதங்கள் கழித்து மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதனை நம்பி ஏராளமானோர் பல லட்ச ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால், அர்ஜூன் கார்த்திக் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மாதத் தொகையை வழங்கிவிட்டு, அதன் பின்னர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான திருவாரூர் மாவட்டம், பூதமங்கலத்தைச் சேர்ந்த சேக் அலாவூதீன் மகன் நூருல் அமீன், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதன் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஏராளமான வாடிக்கையாளர்களிடம் அர்ஜூன் கார்த்திக் உள்ளிட்டோர் ரூ. 81. 15 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து சண்முகம் மகன் அர்ஜூன் கார்த்திக் (45), ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த கணக்குப் பிரிவு மேலாளர் ஜோசப் பிராண்ஸீஸ் மனைவி இவாஞ்சலின் அவிலா தீரத் (32), திருப்பணிப்பேட்டை, பிரதான சாலை குப்புசாமி மகன் ராஜா(68), இவரது மகன் செல்வக்குமார்(32) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :