ஆப்கன் பிரச்னைக்கு அமெரிக்காவே காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளதற்கு அமெரிக்காவே காரணம்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார்
.கடந்த 2001-ம் ஆண்டு செப்.,1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர்
. அதன் பின் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறின
. இதனால் அங்கு மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நெருக்கடி மிகுந்த சூழலுக்கு அமெரிக்கா தான் காரணம். 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆட்கொண்டது.
தலிபான் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவின் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்தனர். ஆப்கன் படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆப்கன் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது.
ஆனால், அமெரிக்க அதை கையில் எடுத்தது.இப்போது அரசியல் தீர்வுக்கு தலிபான்கள் தயாராக இல்லை. தலிபான்கள் பாரம்பரிய பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இது தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாஸ்தூன் இன மக்களும் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Tags :