பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் - ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

by Staff / 02-12-2023 04:23:54pm
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் - ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் திட்டமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கோபி,நம்பியூர் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், பெருமாநல்லூர், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்ததும் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 6 பேர் அந்த வழியாக குன்னத்தூர் அருகே உள்ள நெட்டிச்சிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(63) என்பவர் ஓட்டி வந்த பொலீரோ ஜீப்பில் லிப்ட் கேட்டு கெட்டிசெவியூர் சென்று கொண்டிருந்தனர். ஜீப் தங்கமாகரடு என்ற இடத்தில் சென்ற போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் ஜீப் ஓட்டுநர் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் 6 பேரும் படுகாயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வரப்பாளையம் காவல்துறையினர்; விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்டு சென்ற போது, விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததும், கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via