ஸ்டாலின் தலைமையில் நிதித் துறை  செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

by Editor / 30-07-2021 05:03:51pm
ஸ்டாலின் தலைமையில் நிதித் துறை  செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்



நிதித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 30) தலைமைச் செயலகத்தில், நிதித் துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நிதித் துறையின்கீழ் செயல்படும் துறைகளானகருவூலம் மற்றும் கணக்குகள்,ஓய்வூதியம்,உள்ளாட்சி நிதித் தணிக்கை,கூட்டுறவுத் தணிக்கை,துறைத் தணிக்கை மற்றும் நிறுவனத் தணிக்கை,அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஆய்வுமேற்கொண்டார்.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பெறப்பட்ட நன்கொடைகள், அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்ட ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின் தற்போதைய நிலை குறித்தும், மே 8 முதல் ஜூலை 28ஆம் தேதிவரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டு, ரூபாய் 305 கோடிக்குக் கரோனா நோய்த்தொற்றுத் தொடர்பான பணிகளுக்குச் செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை,பயன்பெற்றுவரும் பயனாளிகளின் விவரங்கள்,சார்நிலைக் கருவூலங்களின் செயல்பாடுகள்,அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள்ஆகியவை குறித்தும் ஆய்வுமேற்கொண்டார்.


 தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கைத் தடைகள் எழாத வண்ணம், சிறந்த நிருவாகத்தை ஏற்படுத்திடவும், நிலுவையிலுள்ள தணிக்கைப் பத்திகளின் தற்போதைய நிலையினைக் கண்காணித்திடவும் அறிவுறுத்தினார்.அரசின் வரவு-செலவுத் திட்ட நடவடிக்கைகளில், வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதில் நவீன வழிமுறைகளைக் கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்


ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகக் கேட்டறிந்த ஸ்டாலின், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்படும், திட்டத் தயாரிப்பு நிதியின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலர் வெ. இறையன்பு,நிதித் துறைக் கூடுதல் தலைமைச் செயலர் ச. கிருஷ்ணன்,கருவூலக் கணக்குத் துறை ஆணையர் டி.என். வெங்கடேஷ்,நிதித் துறைச் சிறப்புச் செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர்,நிதித் துறைக் கூடுதல் செயலர் பிரசாந்த் எம். வடநேரேஉள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

 

Tags :

Share via