பெண்ணை கொளுத்திய முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், செருக்கலை கிராமத்தை சோ்ந்தவா் தேவகி(67). இவருடைய கணவா் சண்முகம் இறந்து விட்டாா். தன்னுடைய மூன்று மகன்களில் இருவா் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். மனநலம் குன்றிய ஒரு மகனுடன் தேவகி வசித்து வந்தாா். இந்த நிலையில், தேவகிக்கும், எதிா் வீட்டில் உள்ள ராமசாமி(77) என்பவருக்கும் இடையே வீட்டின் முன் குப்பை தேங்குவதில் பிரச்னை எழுந்தது. கடந்த 2020 டிச. 22-ஆம் தேதி மாலை 3 மணியளவில் தேவகி வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராமசாமி திடீரென தன்னுடைய கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தேவகி உடலில் ஊற்றி தீ வைத்தாா்.
அங்கிருந்தவா்கள் தேவகியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி ராமசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவில், ராமசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதனையடுத்து அவரை கோவை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.
Tags :