காதல் பிரச்சினையில் மூதாட்டி அடித்துக் கொலை

by Admin / 04-08-2021 04:15:39pm
காதல் பிரச்சினையில் மூதாட்டி அடித்துக் கொலை



கார்த்திக் மனைவி பிரியங்காவின் தங்கையை சரவணக்குமார் காதலித்து வந்துள்ளார். இதற்கு பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் 15-வேலம் பாளையம் திலகர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயங்காத்தாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ராமசாமி 2-வதாக சகுந்தலா என்ப வரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கார்த்திக், சரவணக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் சகுந்தலா இறந்துவிட்டார். இதையடுத்து ராமசாமி, மயங்காத்தாள் ஆகியோருடன் கார்த்திக், சரவணக்குமார் ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கார்த்திக் மனைவி பிரியங்காவின் தங்கையை சரவணக்குமார் காதலித்து வந்துள்ளார். இதற்கு பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 2 குடும்ப த்திற்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவந்தது.
 
இந்தநிலையில் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரியங்காவின் தந்தை அன்பழகன், சகோதரர் சுஷாந்த், உறவினர் ஸ்ரீராம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு வந்தனர். அங்கு மயங்காத் தாளுடன் சரவணகுமார் காதல் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர். இதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரியங்கா, அவரதுதந்தை, சகோதரர், உறவினர் ஆகிய 4 பேரும் சேர்ந்து மயங்காத்தாளை கீழே தள்ளியதாக தெரிகிறது.

இதில் சுவரில் தலை மோதியதில் மயங்காத்தாள் பலத்த காயமடைந்து மயங்கினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மயங்காத்தாள் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 15-வேலம்பாளையம் போலீசார் 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags :

Share via