ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் முத்துராமன், என்பவரின் மகன்கள் சுபாஷ், பரத். இதில், இளைய மகன் சுபாஷ் 8ஆம் வகுப்பும், பரத் 11ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அஜய் பிரசன்னா ஒரு நிமிடத்தில் 82 தடவை தோப்புக்கரணம் போட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஒரு நிமிடத்தில் 88 தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.
இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை பார்த்த சுபாசும், பரத்தும் உலக சாதனை படைக்க நாமும் முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். இதற்காக நாள்தோறும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிகாலை எழுந்ததும் தங்கள் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டனர்.
இதன் பலனாக சுபாஷ் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு சாதனை படைத்தார். அதுபோல பரத் நாற்காலி மேல் நின்று 93 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இவர்களின் சாதனையை அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.
Tags :