மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி; இந்தியாவின்  முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு 

by Editor / 22-09-2021 04:45:31pm
மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி; இந்தியாவின்  முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு 



மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுவெடுத்துள்ளதை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.இந்தியாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் உச்சமடைந்த போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தியது.

தற்போது, நாட்டில் தொற்று பரவல் குறைந்துள்ளது; தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து, 'உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தெரிவித்திருந்தார்.இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், 'இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு வரவேற்கிறது. பல வல்லரசுகள் இரண்டுக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தியுள்ளன;

பூஸ்டர் டோஸ்களையும் செலுத்தி வருகின்றன. ஆனால் பல ஏழை நாடுகள் தங்களது மக்களுக்கு ஒரு டோஸ் கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றன.இந்நிலையில் இந்தியாவின் இந்த முடிவு, உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய உதவும்' என்றார்.

 

Tags :

Share via