சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்

by Editor / 07-10-2021 07:18:27pm
சசிகலா தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டம்

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.


மறுநாள் 17-ந் தேதியன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
நமது ஒரே நோக்கம், இதய தெய்வம் அம்மா அவர்கள் சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் கவலை படக் கூடாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்.


தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு இதய தெய்வம் அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்.


இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு துளிகூட மாறாமல் நாம் முயற்சி செய்து நல்லபடியாக வெற்றி வாகை கூட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, எண்ணம்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via