‘‘காங்கிரசின் முழு நேரத் தலைவர் நானே’’: சோனியா திட்டவட்டம்

by Editor / 16-10-2021 03:37:39pm
‘‘காங்கிரசின் முழு நேரத் தலைவர் நானே’’: சோனியா திட்டவட்டம்

‘‘கடந்த 2019ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பணியாற்றி வருகிறேன். முழுநேர தலைவரை நியமிப்பதற்கான காலக்கெடுவானது, கொரோனா (கோவிட்) 2வது அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. நான் தான் காங்கிரசின் முழு நேர தலைவர்’’ என்று சோனியா காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.


வெளிப்படைத்தன்மையுடன் பேசுபவர்களை எப்போதும் நான் பாராட்டுவேன். என்னுடன் யாரும் மீடியா வழியாக பேச வேண்டியதில்லை. எனவே நாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விவாதம் நடத்தலாம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவை மட்டும் வெளியே சொல்வோம் என்றும் அவர் கூறினார்.


இதற்கிடையில் அடுத்த செப்டம்பர் மாதம் (2022ம் ஆண்டு) காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என இன்றைய காங்கிரஸ் காரியகமிட்டி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்கு சோனியா தலைமை வகித்தார். மக்களவை எம்.பி., ராகுல், பிரியங்கா, அம்பிகாசோனி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், பூபேஸ் பாகேல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், புதிய தலைவர், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள், உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சோனியா பேசுகையில், மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்தையும் நாம் கவனிக்காமல் இருந்தது இல்லை. இது தொடர்பாக மன்மோகன் சிங், ராகுல் ஆகியோருடன் பேசி உள்ளேன். பார்லிமென்டிலும், வெளியேயும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளோம் என்றார்.


விரைவில் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டோம். ஆனால், நாம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் ஒற்றுமையாக, கட்டுப்பாட்டுடன், கட்சியின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டுபணியாற்றினால், சிறப்பாக செயல்பட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று உறுதிபடக் கூறினார்.காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டும் என ஒட்டுமொத்த அமைப்பும் விரும்புகிறது. இதற்கு ஒற்றுமையும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்துவதும் அவசியமாகிறது என்றார்.


இந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், ‘‘சோனியா மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமை பதவி குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை '' எனக்கூறியுள்ளார்.சமீபத்திய 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் அதற்கு முந்தைய சட்டசபை தேர்தலிலும் மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்து வந்திருக்கும் சூழ்நிலையில் கட்சியை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஒரு சில நிர்வாகிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட சோனியா, ‘உண்மை தான். கட்சியை முழுமையாக சீரமைக்க வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமை வேண்டும். கட்சியின் நலனே நமக்கெல்லாம் முக்கியம்... இதே போல கட்டுப்பாடு கண்ணியம் சுயஒழுக்கமும் அவசியம்’ என்பதையும் சோனியா அறிவுறுத்தினார்.

 

Tags :

Share via