திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் முகத்தில் திராவகம் வீசிய பெண்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொடிப்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ராகேஷ் இவர் துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அதே மசாஜ் சென்டரில் செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம்பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவரும் வேலை பணியாற்றிவந்துள்ளார்.ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து துபாயில் வேலை பார்த்து வந்தார்.
ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் 2 பேரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது தங்கை திருமணத்திற்காக, தான் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக ஜெயந்தியிடம் ராகேஷ் தெரிவித்தார்.இதையடுத்து 2 பேரும் துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தனர்.
ராகேஷ் திருவனந்தபுரத்துக்கும், ஜெயந்தி செங்கல்பட்டுக்கும் சென்று விட்டனர். அதன்பின்னர் 2 பேரும் நேரில் சந்திக்கவில்லை. செல்போனில் மட்டும் பேசி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே ராகேசுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராகேஷ் கோவை வந்து தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டு, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
அப்போது தனக்கு திருணமானது குறித்து ஜெயந்திக்கு தெரிவிக்க விரும்பிய ராகேஷ், தனது திருமண புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலம் ஜெயந்திக்கு அனுப்பி உள்ளார்.அதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக ராகேசை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராகேஷ் நேரில் சந்தித்து பேசலாம் நீ வா’ என ஜெயந்தியை அழைத்து உள்ளார். அதன்படி கோவை வந்த ஜெயந்தி, கோவை பீளமேடு பகுதியில் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது,இருவருக்கும் வாக்குவாதம் உருவாகவே தன்னை ஏமாற்றிய காதலன் ராகேசை வஞ்சம் தீர்ப்பதற்காக ஜெயந்தி, ஏற்கனவே கைப்பையில் கொண்டு வந்திருந்த திராவக பாட்டிலை திறந்து ராகேசின் முகத்தில் வீசினார். மேலும் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவரின் கையில் குத்தினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகேஷ் நிலைகுலைந்து கீழே விழுந்தார். திராவகம் பட்டதால் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.இவரது அலறல் சப்தம் கேட்டு
பூங்காவில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார்.
இதற்கிடையில் ஜெயந்தியும் வாழப்பிடிக்காமல், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து 2 பேரும் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
ராகேஷ் அளித்த புகாரில், ஜெயந்தி தன் மீது ஆசிட் வீசியும், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார் என புகாரில் தெரிவித்து உள்ளார். அதேபால், ஜெயந்தி அளித்த புகாரில், ராகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நான் அவருக்கு துபாயில் இருந்தபோது பணம் கொடுத்தேன். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.இதனை தொடர்ந்து 2 பேர் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :