தலைநகரான ஜகார்த்தா நீரில் மூழ்கும்...தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா!

by Admin / 22-01-2022 02:45:11pm
தலைநகரான ஜகார்த்தா நீரில்  மூழ்கும்...தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா!

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரம் பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

உலகத்தில் ஜகார்த்த நகரம் மிக வேகமாக மூழ்கி வருவதாக கருதுகின்றனர்.இந்த நகரமானது 2050 ஆண்டிற்குள் முழுமையாக மூழ்கும் என அந்நாட்டு தொழில் நுட்ப கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில்  10 ஆவது இடத்தில் ஜகார்த்தா இருந்து வருவதாக ஐ.நா தெரிவித்து உள்ளது. 

இதன் நகர்ப்புற பகுதிகளில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளதாகவும், பெருநகரப் பகுதியில் 3 கோடி மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகரம் அதிக மக்கள் தொகை மட்டுமல்லாமல், காற்று மாசால் தவித்து வருகிறது. எனவே ஜகார்த்தாவில் இந்த கடும் சூழல் நிலவுவதால், மக்களின் நலனுக்காக தனது தலைநகரை மாற்ற முடிவு செய்துள்ளது இந்தோனேஷியா அரசு. 

அதிபர் ஜோகோ விடோடோ 2019-ல் தலைநகரம் மாற்றப்படும் என்று முதலில் அறிவித்தார். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக இதன் பணிகள் தாமதமானது.
 
புதிதாக உருவாகப் போகும் தலைநகருக்கு ’நுசாந்தரா’ என இந்தோனேஷிய அதிபர் பெயரிட்டுள்ளார். 3,200 கோடி செலவில் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது இந்தோனேஷிய அரசு. 

இந்த புதிய தலைநகரில், அரசு கட்டிடங்கள், அதிபர் மாளிகை, பொதுமக்கள், போலீசார், ராணுவம் உள்ளிட்டோர் தங்குவதற்கான 100 லட்ச வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்னியோ தீவில், 2,561 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த திட்டங்கள் நடைபெறவிருக்கிறது.

தலைநகரை கட்டமைக்கும் பணியானது 5 கட்டமாக நடைபெறும் என அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதில் முதல் கட்ட கட்டமைப்பு இந்த ஆண்டே தொடங்கவிருக்கிறது. 

அடர்ந்த காட்டுப் பகுதியாக போர்னியோ இருப்பதால் அதை தற்போது மாற்றுவது சுற்றுச்சூழலை பாதிக்கும் என பலரும் விவாதித்து வருகின்றனர். இதற்கு முன் பிரேசில், கஜகஸ்தான், மியான்மர், எகிப்து ஆகிய நாடுகள் தனது தலைநகரை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via