சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

by Editor / 24-04-2022 07:51:08am
சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி, 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து திடீரென்று வீட்டிற்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்குள் வந்தனர். அவர்களை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சிறுமியின் தாய், அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

 

Tags :

Share via