பிறந்து 40 நாட்களேயான குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff / 05-06-2022 03:53:11pm
பிறந்து 40 நாட்களேயான குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்பு


அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ (வயது 22), அம்ச நந்தினி (வயது 20) ஆகியோருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் யுவன் என்ற ஆண் குழந்தை 40 நாட்கள் முன்பு  பிறந்துள்ளது. குழந்தையின் தந்தை மனோ, சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு 2 மணி அளவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அம்ச நந்தினி அருகே இருந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.குழந்தையை காணவில்லை என்று அம்ச நந்தினி அலறி அழுத நிலையில், வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில் பின்னர் வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.40 நாட்களே ஆன பிறந்த குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில தினங்களேயான குழந்தையென்பதால், தவழ்ந்து சென்று தவறி விழக்கூட வாய்ப்பில்லை என்பதால் குழந்தைக்கு வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுமென தெரிகிறது.

 

Tags :

Share via