திருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கும் வருடாந்திர 3 நாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்கியது. திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமியும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களும் ஸ்நபனபேரம் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே தினசரி ஆர்ஜித சேவையின் போது திருமஞ்சனங்கள் நடைபெறுவதுடன் மாடவீதி வலத்திலும் மலையப்ப சுவாமி மட்டுமே தாயார்களுடன் வலம் வருகிறார். உற்சவமூர்த்தியின் மேல் தங்கக் கவசம் என்றும் சாற்றப்பட்டிருக்கும். அதனால் மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயார் களுக்கும் தலையிலிருந்து திருமஞ்சனம் நடத்தப்படாமல் திருப்பாதங்களில் மட்டுமே பால், தயிர், இளநீர், உள்ளிட்ட திருமஞ்சன பொருள்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தங்கக் கவசத்தை ஆண்டுக்கு ஒருமுறை அகற்றி அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து செப்பனிட்டு மீண்டும் அணிவித்து வருவதுடன் கவசங்கள் அகற்றப்பட்ட பின் உற்சவமூர்த்தியின் சிலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. இதனை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் என்று தேவஸ்தானம் அழைத்து வருகிறது. இந்த ஜேஷ்டாபிஷேகம் 3 நாள்கள் நடத்தப்படும். முதல்நாள் தங்கக் கவசம் களையப்பட்டு உற்சவமூர்த்திகளுக்கு வைர கவசமும், 2-ம் நாள் முத்துக் கவசமும், 3-ம் நாள் மகாபூர்ணாஹுதி நடத்தி தங்கக் கவசத்தை செப்பனிட்டு அதற்கு பூஜைகள் செய்து மீண்டும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. அதன்படி நேற்று திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. முதல் நாளன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களின் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டு சாந்தி ஹோமம் மற்றும் சதகலச திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு வைர கவசம் அணிவித்து ஊஞ்சல் சேவை நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலையப்ப சுவாமிக்கு வைர கவசமும், முத்துக் கவசமும் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2-வது நாளான நாளை ஏழுமலையானுக்கு முத்து கவசம் பொருத்தப்பட உள்ளது.
Tags :