புதுமண தம்பதிக்கு விருந்து வைக்க வேண்டும் என கூறி தீர்த்து கட்டிய அண்ணன்

by Staff / 14-06-2022 01:15:18pm
புதுமண தம்பதிக்கு விருந்து வைக்க வேண்டும் என கூறி தீர்த்து கட்டிய அண்ணன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துலுக்கவெளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் சரண்யா (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அப்போது இவரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரை சேர்ந்த மோகனும் (32) காதலித்து வந்தனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு சரண்யா வீட்டில் அவரது அண்ணன் சக்திவேல் (31) எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சரண்யாவை தனது மைத்துனர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதனை அறிந்த சரண்யா கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் மோகனை திருமணம் செய்து கொண்டார். 

அதிர்ச்சியடைந்த சக்திவேல் புதுமண தம்பதிக்கு விருந்து வைக்க வேண்டும் என கூறி அவர்களை சென்னையில் இருந்து வரவழைத்தார். பின்னர் இருவரையும் சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சரக டி.ஐ.ஜி.கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரண்யா, மோகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

இந்நிலையில் சரண்யா, மோகன் உடல் இன்று காலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சரண்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மோகன் உடலை வாங்க உறவினர்கள் வரவில்லை. அதாவது அவருக்கு நெருங்கிய சொந்தம் என கூறி யாரும் வரவில்லை. அவரது தாயும் மனநல சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு என்ன நடந்தது என கூட தெரியாது. 

இதையடுத்து போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையாக மோகனின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரில் உள்ள கிராம நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்களிடம் போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதற்கு கிராம நாட்டாண்மைகள் மிகுந்த சோகத்துடனே போலீசாரிடம் பேசி உள்ளனர். 

மோகன் நல்ல பையன். அனைவரிடமும் அன்பாக பேசுவான். ஊர் மக்களிடம் அவனுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நேற்று அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து கவலை அடைந்தோம். கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது உடலை வாங்க நெருங்கிய சொந்தம் என்று யாரும் கிடையாது. ஊர் மக்களாகிய நாங்கள் தான் அவருக்கு எல்லாம். அவரது உடலை வாங்க நாங்கள் வருகிறோம். அனைத்து காரியங்களும் செய்து அடக்கம் செய்வோம் என கூறினர். 

இதனை தொடர்ந்து ஊரில் இருந்து கிராம நாட்டாண்மைகள் புறப்பட்டு கும்பகோணத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த உடன் மோகன் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட சக்திவேல், ரஞ்சித் இன்று காலை திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

முன்னதாக ரஞ்சித் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:- நான் சரண்யாவின் உறவினர். இருவரும் பேசி பழகி வந்தோம். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இதுகுறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கூறியபோது அவரும் சம்மதம் தெரிவித்தார். 

இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என சந்தோஷத்தில் திளைத்தேன். ஆனால் இடையில் மோகன் புகுந்து சரண்யாவை காதலித்தார். இதனால் சரண்யாவை திருமணம் செய்துகொள்ளும் எனது எண்ணம் நடக்காமல் போய் விடுமோ என அஞ்சினேன். 

ஆனால் அதற்குள் சரண்யா, மோகனை திருமணம் செய்து கொண்டார். எனக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இதனால் சக்திவேலிடம் பேசி இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டுவோம் என கூறி சக்திவேல் மனதை மாற்றினேன். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டினோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Tags :

Share via