குழப்பம் விளைவிக்கும் சசிகலாவுக்கு  அதிமுகவினர் ஆதரவு தர மாட்டார்கள்   கே.பி.முனுசாமி  

by Editor / 31-05-2021 04:27:29pm
குழப்பம் விளைவிக்கும் சசிகலாவுக்கு  அதிமுகவினர் ஆதரவு தர மாட்டார்கள்   கே.பி.முனுசாமி  

 


அதிமுகவை சரிசெய்வோம். கவலைப் படாமல் இருங்கள் என்று சசிகலா தொண்டர்களிடம் பேசிய உரையாடல் ஆடியோ  அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.
‘கொரோனா முடியட்டும் ஜாக்கிரதையா இருங்க. அவங்கள்லாம் சண்டை போட்டுக்குறது ரொம்ப கவலையா இருக்கு. நாங்கள்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிப்பா இது. சீக்கிரம் வர்றேன். கட்சியை நல்லாகொண்டுவந்துவிடுவோம். கவலைப்படாதீங்க” என்று சசிகலா கூறியிருக்கிறார்.
இந்நிலையில்  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது ,
“அதிமுக என்ற மாபெரும் இயக்கத்துக்கும் இந்த அம்மையாருக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. அந்த அம்மையார் இந்த கட்சியிலேயே இல்லை. மாறாக நன்றாக சென்று கொண்டிருக்கிற எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய இந்த இயக்கத்தில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் இந்த அம்மையாரை முன்னிறுத்தி இதுபோன்ற கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஏற்படுத்தக் கூடிய குழப்பத்துக்கு ஒரே ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார். ஏனென்றால் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், கட்சியின் பல்வேறு நிலை பொறுப்பாளர்களும் கடுமையாக போராடி இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வந்துகொண்டிருக்கிறார்கள். நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிற இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வழியில் திசை திருப்பி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துகளைச் சொல்லுகிறார்கள். நிச்சயமாக அவருடைய எண்ணம் ஈடேறாது.
அந்த அம்மையார் பேசியதை நானும் கேட்டேன். எந்தத் தொண்டனும் அவரைத் தொடர்புகொண்டு பேசவில்லை, மாறாக இவர்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகிறார். பேசுகிற தொண்டனும் அமமுகவைச் சேர்ந்த தொண்டன். ’அம்மா நீங்க வந்த ரேலியில நான் கலந்துகிட்டேம்மா’ என்று சொல்கிறார்.
சாதாரண நிலையில் இருந்த அந்தக் குடும்பம் இந்தக் கட்சியால்,அம்மாவால் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உயர்த்திய அம்மாவின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது அந்த குடும்பம் ஒதுங்கியிருப்பது நல்லது என்று கருதுகிறேன். இல்லையென்று சொன்னால் அந்த பழிபாவம் முழுதும் அந்த அம்மையாரை சேரும். எந்த சூழ்நிலையிலும் அந்த அம்மையார் இந்த இயக்கத்துக்குள் நுழைய முடியாது, நுழைய வாய்ப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார் கே.பி. முனுசாமி.

 

Tags :

Share via