கோத்தபய 13-ந்தேதி ராஜினாமா

by Editor / 10-07-2022 02:11:07pm
கோத்தபய 13-ந்தேதி ராஜினாமா

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே மக்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார். அவர் வருகிற 13-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து இலங்கையில் அடுத்து என்ன அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலகியிருப்பதால் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் யார் என்பதை அறிய இலங்கை மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இது தொடர்பாக நேற்று மாலையில் இருந்து இலங்கை சபாநாயகர் மகிந்த யப்பா அபவக்தனே தலைமையில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடந்தபடி உள்ளது. மகிந்த யப்பா இடைக்கால அதிபர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்கக்கூடும் என்று மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக இலங்கையில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மற்றும் சிறிய கட்சிகள் கொண்ட சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பில் நடக்கிறது. அதில் கூட்டாட்சிக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகும் பட்சத்தில் ஒரு வாரத்துக்குள் தற்காலிக அதிபர் பதவி ஏற்க வேண்டும். இலங்கை பாராளுமன்றம் 3 நாட்களில் கூடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகு 30 நாட்களில் நிரந்தர அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கிடையே பிரதமரையும் இதே முறையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய இலங்கை தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள்.

 

Tags :

Share via