சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரக்கொலை

by Editor / 17-08-2022 05:55:37pm
சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரக்கொலை

ஹரியானா மாநிலம் பானிபட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6 வயது சிறுமியின் சடலம் சாக்கடை குழிக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 40 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி ஈஸ்வர் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வர் சிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி பகுதியை சேர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளாக பானிபட்டில் உள்ள பல்வேறு உணவகங்களில் வேலை பார்த்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பானிபட்டில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தனது 4 வயது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, ஈஸ்வர் சிங் கடத்திச் சென்றார். இச்சம்பவம் ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது.சிறுமியை செக்டார் 25ல் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். அந்த காட்சிகளில், குற்றவாளி சிறுமியை கடத்திச் செல்வது தெரிந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டார்.குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மாலை பானிபட் செக்டார் 25ல் உள்ள ஜிம்கானா கிளப் அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி மற்றும் போக்சோ சட்டத்தின் முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, பானிபட் நீதிமன்றம் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

 

Tags :

Share via