நெல்லையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு  நாட்டுக்கோழி முட்டை இலவசம் 

by Editor / 12-06-2021 06:51:18pm
நெல்லையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு  நாட்டுக்கோழி முட்டை இலவசம் 


 திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 50- வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று காந்தி நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் காந்தி நகரில் இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
முகாம் தொடக்கத்தில் சிலர் மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு வந்திருந்தனர். மக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சம் நீங்கி தயக்கமின்றி தடுப்பூசிபோட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஊசி போட்டுகொண்ட ஒவ்வொருவருக்கும் நாட்டுக்கோழி முட்டை ( ஆறு முட்டைகளைக் கொண்ட ஒரு செட்) இலவசமாக வழங்கப்பட்டது.
காந்திநகரில் மலர் நாட்டுக்கோழி பண்ணை நடத்திவரும் லட்சுமிகாந்தன் என்பவர் இந்த முட்டைகளை இலவசமாக வழங்கினார். தொடக்கத்தில் 30 பேருக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் இதை கேள்விப்பட்டு பலர் ஊசிபோட வந்திருந்தனர். தடுப்பூசி போட்ட 207 பேருக்கும் இலவசமாக நாட்டுக்கோழி முட்டை செட் பாக்ஸ்களை வழங்கப்பட்டது

 

Tags :

Share via