பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதலை கண்காணிக்க சிசிடிவி கேமரா

by Editor / 01-10-2022 11:25:54pm
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதலை கண்காணிக்க சிசிடிவி கேமரா

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டிஐஜி பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அன்றாட நடவடிக்கைகள், நன்னடத்தை கைதிகளைக் கொண்டு சிறைகளில் செயல்பட்டு வரும் சிறை அங்காடி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் நன்னடத்தை சிறைவாசிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் சிறைவாசிகளுக்கான மருத்துவ முகாமை அவர் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை டிஐஜி பழனி, பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறைவாசிகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் ஐந்து கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக கூறினார்.தமிழகத்தில் நன்னடத்தை சிறைவாசிகளைக் கொண்டு ஐந்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் மேலும் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கும். மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறைந்துள்ளது என விளக்கமளித்தார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 63 நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்ததின் அடிப்படையில் முதல் கட்டமாக எட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நடந்தது போன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே சாதி ரீதியிலான மோதல் ஏற்படாமல் இருக்கச் சிறைவாசிகளுக்கு தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கைதிகளுக்கு இடையே மோதலை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது என்றார்.

 

Tags :

Share via