மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் தலைமறைவு
குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சியாஹி (வயது 22). சியாஹிக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருடன் சியாஹிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் மாணவியும், வாலிபரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.இந்த நிலையில் அந்த மாணவி கடந்த சில நாட்களாக வாலிபர் சியாஹியுடனான பழக்கத்தை குறைத்து கொண்டார். இதனால் மாணவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என எண்ணிய சியாஹி, மாணவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி, வாலிபர் சியாஹியிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தந்து விடும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் குழித்துறை பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவிக்கு சியாஹி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது பற்றி மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சியாஹி மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி தெரியவந்ததும் சியாஹி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags :