இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி பலி

by Staff / 13-11-2022 03:53:17pm
 இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி பலி

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கரசானுார் பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன், 35; விவசாயி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி தெருவைச் சேர்ந்தவர் மணவாளன் மகள் ராஜகுமாரி, 27. இருவருக்கும் நான்கரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ராஜகுமாரி, புதுச்சேரி தனியார் மருத்துவமனை மற்றும் 'ஜிப்மர்' மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்ந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

தலை பிரசவத்தையொட்டி, இரண்டு மாதங்களுக்கு முன் வளைகாப்பு நடந்தது. பின், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11: 00 மணிக்கு, அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன், அவர் வானுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சைபலனின்றி இறந்தார். வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளுடன் ராஜகுமாரி இறந்ததால், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். திருமணமாகி நான்கரை ஆண்டுகளே ஆவதால் ஆர். டி. ஓ. , விசாரணை நடத்தி வருகிறார்.
வானுார் அருகே மூச்சுத் திணறலால், வயிற்றில் இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via