மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது மகன் கண் முன்னே தாய் பலி

by Staff / 21-12-2022 03:19:41pm
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது மகன் கண் முன்னே தாய் பலி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 45). இவர்களது மகன் ரவிக்குமார் (25). நேற்று மாலையில் ரவிக்குமார் அவரது தாயாருடன் இராசிபுரம் முனியப்பன் கோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரது உறவினர் ஒருவரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது இராசிபுரம் எல். ஐ. சி. ஆபீஸ் மேம்பாலத்தில் இராசிபுரத்தை நோக்கி வந்தனர். அப்போது ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர் கேட் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ரவிக்குமார் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பலத்த காயம் அடைந்த ரவிக்குமாரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரவிக்குமார் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இராசிபுரம் போலீசார் விபத்தில் இறந்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இது பற்றி இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.இராசிபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via