பாஜகவுடன் கூட்டணி இல்லை; சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்  

by Editor / 01-07-2021 04:56:50pm
 பாஜகவுடன் கூட்டணி இல்லை; சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்  


மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்  தெரிவித்தார்.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:
"பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் சிவசேனை, தாக்கரே குடும்பத்திற்கு பிரதமருடனான உறவு மரியாதைக்குரியது; அன்பு நிறைந்தது. அவர் நாட்டின் பிரதமர். அவருடன் எங்களுக்குத் தனிப்பட்ட சண்டை எதுவும் இல்லை.
கூட்டணியிலிருந்து நாங்கள் விலகினோம். அதற்காக அவர் எங்களது எதிரி என்றாகிவிடாது. அவர் நாட்டின் தலைவர். மகாராஷ்டிரத்துக்கு அவர் தேவை. மாநிலம் இக்கட்டான நிலையிலிருக்கும்போது அவர் உதவுவார்.
மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணிதான் (சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி) நாட்டில் சிறந்தது. இந்த முன்னணி 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவுசெய்யவே அமைக்கப்பட்டது. அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்துள்ளன. அது இரண்டு ஆண்டுகள் நிறைவுசெய்துவிட்டது. இந்த ஆட்சி 10 நாள்களில் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி பேசி வந்தது. இருந்தபோதிலும், இந்தக் கூட்டணி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேற்கொண்டு 3 ஆண்டுகால ஆட்சியையும் நிறைவு செய்யும்.

 

Tags :

Share via