பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

by Editor / 29-01-2023 10:53:31am
பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 9.30மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான பிப்ரவரி 3ம்தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், பிப்ரவரி 4ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.இன்று முதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வருகிற பிப்ரவரி 7ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு நானுற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களில் தங்குமிடம், மின்சாரம், குடிநீர், கழிவறை, மருத்துவம், உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

 

Tags :

Share via