கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சிமிட்டஹள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் மல்லப்பா என்ற விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை அவரது கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட விவசாயி மல்லப்பா அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு தீயை அணைக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் அப்பகுதியில் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு வரை கரும்பு பயிர்கள் முழுவதும் எரிந்து நாசமானது.மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வராததால் பொதுமக்கள் இணைந்து மீண்டும் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது போன்ற தீ விபத்து ஏற்படும் காலங்களில் ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தால் அவர்கள் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பகுதிக்கு வர மிகவும் தாமதம் ஆகின்றது எனவும் இதனால் தீயை அணைக்க பொதுமக்கள் மிகவும் போராட வேண்டிய சூழல் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள். இது போன்ற தீ விபத்துகளை தவிர்க்க தாளவாடி மலைப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து தாளவாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :