வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

by Staff / 03-03-2023 12:39:58pm
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், தொழிலாளி. இவருக்கு கலையரசன்(வயது 28), கவித் (25) என 2 மகன்கள் உண்டு. இதில் கவித் பி. காம். படித்து விட்டு வேலை தேடிவந்தார். ஆனால் சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கவித் தனது அண்ணன் கலையரசனிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டு வந்ததாக தெரிகிறது. அவருக்கு கலையரசன் ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கவித் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் கவித் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கவித் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து கலையரசன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கவித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வேலை கிடைக்காத விரக்தியில் கவித் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via