ஓபிஎஸ் பதவிக்காக அடைக்கலம் தேடி செல்லுகிறார் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

by Staff / 09-05-2023 05:43:04pm
ஓபிஎஸ் பதவிக்காக அடைக்கலம் தேடி செல்லுகிறார் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த காலங்களை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலம் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இந்நிலையில் ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “ ஓ.பன்னீர்செல்வம் , தினகரன் சந்திப்பு சந்தர்ப்ப வாத சந்திப்பு. இதனால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கமும் ஏற்படப்போவதில்லை. இதனை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இப்போது அடைக்கலம் தேடி தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக சென்றிருக்கிறார்.கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பிறகு அவர் உச்சநீதிமன்றம் வரை சென்றார். நேற்று கட்சியில் இருந்து நீக்கி இன்று உடனே இந்த சந்திப்பு நிகழவில்லை. கடந்த 10 மாதங்களாக நீதிமன்றம் சென்று அவர் வைத்த வாதங்கள் தோல்வியடைந்த பின்னர் தொண்டர்களிடத்தில் தோல்வி, மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த பின்னால் யாரை எதிர்த்தாரோ எந்த குடும்பம் தமிழகத்தில் அதிமுகவில் இருக்கக்கூடாது என்று தர்மயுத்தம் நடத்தினாரோ அந்த குடும்பத்திடம் அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்.அவருடைய சுயநலத்துக்காக , எதிர்காலத்திற்காக , பதவிக்காக சென்றிருக்கிறார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களால் ஏற்றுக்கொண்ட தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதி செய்யப்பட்டது. இதில் எந்தவிதமாக குழப்பமும் இல்லை. இதில் தொண்டர்களும், மக்களும் தெளிவாக உள்ளனர்.இது மக்கள் மத்தியில் ஏற்கனவே நின்று மக்களின் அங்கீகாரத்தை பெற முடியாமல் மக்களிடம் தோல்வியுற்ற தலைவர்களாக தான் இப்போது சந்திக்கின்ற நிகழ்வுகள். ஈரோடு தேர்தலில் எல்லோரும் நின்றார்கள். பிரதான எதிர்கட்சி அதிமுக என நின்று காட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பை ஊடகங்கள் பெரிதாக காட்டலாம். மக்களிடத்தில் தொண்டர்களிடத்திலும் இது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
 

Tags :

Share via