தீக்குளிக்க கூறியதாக அதிமுக பிரமுகர்  முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது பரபரப்பு புகார்

by Editor / 24-07-2021 05:34:43pm
தீக்குளிக்க கூறியதாக அதிமுக பிரமுகர்  முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது பரபரப்பு புகார்

 


 தர்மபுரி மாவட்டம், மோலையானுரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மோலையானுர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவர்.கிருஷ்ணமூர்த்தி சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் புகார் மனு ஒன்றை அளித்தார்.


அந்தப் புகாரில் "கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் என்னுடைய ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை பழனியப்பன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் உதவியுடன் பறித்து விட்டார். அதனால் நான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி தற்கொலை முயற்சி வரை சென்றேன்.


இதனைக் கேள்விப்பட்ட முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அவருக்கும் பழனியப்பனுக்குமிடையே உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்காகவும், பழனியப்பனுடைய அமைச்சர் பதவியை பறிப்பதற்காகவும் என்னை அழைத்துப் பேசினார்.


அப்போது என்னிடம் பழனியப்பனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கூறி தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்குமாறு கேட்டுக் கொண்டார். 


மேலும், இப்படி நீ செய்வதன் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா நீ இழந்தவற்றை உனக்கு கிடைக்கச் செய்வார். உனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் எனவும் அன்பழகன் தெரிவித்தார்.தீக்குளிக்க முயற்சிஅதைத் தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அமைச்சர் அன்பழகன் அவருடைய வாகனத்தில் ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனை தலைமைச் செயலகத்திற்குள் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து தீக்குளிக்கச் சொன்னார். நானும் அவர் கூறியபடி முதலமைச்சர் ஜெயலலிதா வரும்போது தீக்குளிக்க முயற்சித்தேன்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் பழனியப்பனுடைய பதவி பறிக்கப்பட்டது. அவரின் தூண்டுதலின் பேரிலேயே நான் தீக்குளிக்க முயன்றேன். அதன் பின்னர் பதவிக்கு வந்த அன்பழகன் எனக்கு எந்தவிதமான உதவிகளும் செய்யாமல் ஏமாற்றினார்.முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவருடைய அரசியல் ஆதாயத்திற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டு மிரட்டவும் செய்வதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via