பிணமாக மீட்கப்பட்ட நர்சரி பண்ணை அதிபர் கொலை செய்யப்பட்டாரா? விசாரணை.

by Staff / 09-07-2023 03:05:05pm
பிணமாக மீட்கப்பட்ட நர்சரி பண்ணை அதிபர் கொலை செய்யப்பட்டாரா? விசாரணை. சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கீழ வண்ணான்விளையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கோபி (வயது 21). இவர் அந்த பகுதியில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி கோபி திடீர் என்று மாயமானார். அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் டி. சி. நகர் பகுதியில் முட்பு தர்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆண் பிணம் கிடப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்தது கடந்த 6-ந்தேதி மாயமான கீழ வண்ணான்விளையை சேர்ந்த கோபி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை ரவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.<br /> இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அப்பா, அம்மாவை கவனித்து கொள்ளுமாறும் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது சகோதரருடையது இல்லை என்று கோபியின் அண்ணன் தெரிவித்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோபியின் மோட்டார் சைக்கிளும், செல்போனும் மாயமாகியுள்ளது. கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோபிக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடினார்கள். அவரும் தலைமறைவாகியுள்ளார். இன்று காலையில் கோபி பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி. சி. டி. வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோபியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்ற விபரம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.
 

Tags :

Share via