உவரி அருகே கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

by Editor / 16-08-2023 04:48:27pm
உவரி அருகே கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் ராகுல் (14). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் மகன் முகேஷ் (13), ரேஷன் கடை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (14). இவர்கள் 3 பேரும் நவ்வலடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். ராகுல், ஆகாஷ் ஆகியோர் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். 

நேற்று மாலை  இவர்கள் 3 பேரும் நவ்வலடி கடலில் குளிக்க சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து முகேசின் அண்ணன் முத்துகிருஷ்ணன், சிறுவர்கள் 3 பேரையும் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். அப்போது நவ்வலடி கடற்கரையில் அவர்கள் 3 பேரும் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் உள்ளிட்டவை கிடந்தது. அவர்கள் 3 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.

உடனே 3 சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் கடற்கரையில் திரண்டனர். தகவல் அறிந்து உவரி போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கியதை அறிந்த போலீசார், உவரி கடலோர போலீஸ் மற்றும் திசையன்விளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி, சுகுமாரன் மற்றும் தீயணைப்பு போலீசார் படகு மூலம் காணாமல் போன மாணவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். அவர்கள் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுவர்கள் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரின் உடல்களும் உவரி அருகே கோடாவிளை கடற்கரையில் கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்து அவர்களது பெற்றோர் அங்கு சென்று மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.  கடலில் மாயமான மற்றொரு சிறுவன் முகேசின் உடலும் அதே கோடாவிளை பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tags :

Share via