பொது நூலகங்களை திறக்க அரசு உத்தரவு
போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மே 10ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் நோய்தொற்று படிப்படியாக குறைந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்படுத்த ஆணையிடப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் செயல்படுத்த கோரி, வாசகர்கள், பொதுமக்கள் மூலமாக பல்வேறு விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் வந்துள்ளன. அத்துடன் போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்ககளின் நலன்களை கருத்தில் கொண்டும் கோரிக்கைகள் வந்தது.
இதனையடுத்து, பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும், பெருந்தொற்று கால பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சனிக்கிழமை முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்படும் நூலகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :