17 வயது சிறுமியை கடத்தி சென்று 5 மாதமாக குடும்பம் நடத்திய பெயிண்டர் கைது

by Admin / 24-07-2021 09:45:50pm
17 வயது சிறுமியை கடத்தி சென்று 5 மாதமாக குடும்பம் நடத்திய பெயிண்டர் கைது



கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறை சேர்ந்தவர் சிவா (வயது 24). பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். ஆனால் மாணவி வாலிபருடனான காதலை கைவிடவில்லை.


இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வெள்ளக்கிணறில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு குனியமுத்தூர் பகுதியில் குடியேறினர். ஆனாலும் சிவா மாணவியுடனான காதலை கைவிடவில்லை.கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மாணவியை சிவா திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார்.தங்களது மகளை சிவா கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற சிவாவை கைது செய்தனர்.அவரிடம் இருந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த சிவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via