தொழிலாளி மண்வெட்டியால் சரமாரி அடித்துக்கொலை வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(46), தொழிலாளி. இவரது மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குமார், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள செஞ்சி சாலையில் தனது மைத்துனரான சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆவணியாபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(33) என்பவர் முன்விரோதம் காரணமாக குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் குமாரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த குமாரை, அப்பகுதியினர் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மைத்துனர் விநாயகம் நேற்று சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து கமலகண்ணனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்விரோத தகராறில் தொழிலாளி மண்வெட்டியால் சரமாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :