நெல்லையில் விபத்து 3 பேர் பலி 

by Editor / 27-07-2021 09:12:07pm
நெல்லையில் விபத்து 3 பேர் பலி 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள தனியார் இரும்பு கம்பி நிறுவனத்தில் பணிபுரிபவர், தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார். இவரும் இவருடன் பணிபுரியும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அடுத்து அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் வந்த நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி எடுத்த வேப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த காசி மணி அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் அவர்களது 3 வயது குழந்தை கேசவ ஹரி ஆகியோர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

   இதில் கர்ணன் காசி மணி உள்ளிட்டோர் வந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் அந்த வாகனத்தில் வந்த ஜெயலட்சுமி, அவரது மூன்று வயது மகன் கேசவ ஹரி ஆகியோர் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தனர். மற்றொரு புறம் அந்த வாகனத்தில் இருந்த முத்துக்குமார், விக்னேஷ் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் சாலையில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை  மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்துக்குமார் உயிரிழந்த நிலையில்  மீதமுள்ள மூவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் சிக்கியிருந்த கர்ணன் மற்றும் காசி மணி ஆகியோர் உடலில் தீக்காயங்கள் பட்ட நிலையில் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

 சாலையில் சென்றவர்கள்  கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம்வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை போராடி  அணைத்தனர். விபத்து சம்பவம் தொடர்பாக கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via