9 முதல் 12 வரை  பள்ளிகளைத் திறக்க ஆலோசனை    அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 27-07-2021 04:17:42pm
 9 முதல் 12 வரை  பள்ளிகளைத் திறக்க ஆலோசனை    அமைச்சர் அன்பில் மகேஷ்



சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் "உயிர்கோள அடர் வனம்" திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் "கல்வி 40 செயலி" -யை தொடங்கி வைத்த அவர், பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் உயிர்கோள அடர் வனத்தை பார்வையிட்ட அவர் 1000-வது மரக்கன்றை நட்டார். பின்னர் மாணவர்களின் விளையாட்டு போட்டி சாகசங்களை பார்வையிட்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 


இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். மிக விரைவில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறும். நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைப்பாடும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பதே, அதுவே அரசின் நிலைப்பாடு.

அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

 

Tags :

Share via