அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்கு

by Staff / 25-10-2023 01:01:02pm
அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்கு

நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாடுகளை வியாபாரிகள் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் அடைத்து ஏற்றி செல்வர்.இந்த செயலால் மாடுகள் வதை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி வாகனங்களில் உணவு, தண்ணீர் இன்றி மாடுகளை மிகவும் நெருக்கமாக அடைத்து கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் புதன்சந்தையில் மாடுகளை வாங்கி கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக 4 லாரிகளில் 78 மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படி டிரைவர்கள் சத்தியமங்கலம் குணசேகர் (வயது 46), ஈரோடு ஜெபருல்லா (40), கேரளாவை சேர்ந்த முகமது இப்துலா (39), அப்துல் அஜீஸ் (59) என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via