உரிமம் இல்லாமல் மறைத்து வைத்திருந்த பட்டாசுகள்...போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர்

by Staff / 25-10-2023 01:05:33pm
உரிமம் இல்லாமல் மறைத்து வைத்திருந்த பட்டாசுகள்...போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். தற்பொழுது தீபாவளி நெருங்குவதால், பலரும் மாவட்ட ஆட்சியருக்கு பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்து வரும் நிலையில், பட்டாசு கடைகள் வைக்க பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. காரணம் கடந்த இரண்டு மாதங்களாக பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில், பலரும் உயிரிழந்ததால் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் கதிர்வேல் என்பவர் தனது மளிகை கடையில் பட்டாசுகளை கள்ளத்தனமாக விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் கதிர்வேலின் மளிகை கடையில் திடீர் சோதனை செய்த பொழுது, சுமார் முப்பதாயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன் அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்ய முயன்ற கதிர்வேலையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via