மாணவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை

by Staff / 03-03-2024 01:12:36pm
மாணவியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை

சென்னை மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி என்பவர் சென்னையில் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அழகேசன் (26) என்பவர் அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், அழகேசனை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியில் வந்த அழகேசன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி கல்லூரியில் இருந்து தனது தோழியுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த அஸ்வினியை கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அஸ்வினியை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கே. கே. நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி. எச். முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி. ஆரத்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும் 10, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via