ரயில்நிலையத்தில் மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் கைது

by Staff / 20-03-2024 02:34:06pm
ரயில்நிலையத்தில் மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் கைது

கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த ரயில்நிலைய நடைமேடையில் நேற்று நின்றுகொண்டிருந்த பெண்ணிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். இதில், அலறி கூச்சலிட்டபடி அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அருகில் நின்றிருந்த பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதன்பேரில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர். பிறகு மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அவரை அனுப்பி வைத்தனர். பின்னர் பலத்த காயத்துடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், ரத்த காயத்துடன் கிடந்தவர் பிராட்வே பகுதியை சேர்ந்த பானுமதி (26) என்றும், அவரை கத்தியால் குத்தியவர் அவரது கணவர் வெங்கடேசன் (30) என்பதும் தெரியவந்தது. 

 

Tags :

Share via