அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை- தமிழக அரசு முடிவு

by Admin / 06-08-2021 04:40:38pm
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை- தமிழக அரசு முடிவு



   
அரசு நடத்திய ஆய்வில் 2020- 21-ம் நிதியாண்டுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தாமல் இருந்து இருந்தால் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
 
இவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆண்டும் பணி ஓய்வுபெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆண்டு தோறும் சுமார் 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுகிறார்கள்.

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு உடனுக்குடன் அதற்குரிய நிதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா பரவல் பிரச்சனை காரணமாக தமிழக அரசின் நிதி நிலைமையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஓய்வுபெறும் போது அரசு ஊழியர்களுக்கு உடனடியாக நிதி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்ததால் பொருளாதாரத்தில் எதிர்பார்த்த மேம்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக அதிகரித்து உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு செலவின வகைகளில் பல கோடி ரூபாய் மிச்சமானது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைமையில் புதிய அரசு அமைந்ததும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படப் போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே அரசு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைத்தால் எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. அரசு ஊழியர்களிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அரசு நடத்திய ஆய்வில் 2020- 21-ம் நிதியாண்டுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தாமல் இருந்து இருந்தால் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்பது தெரியவந்தது. அதுபோல நடப்பாண்டில் அதை விட கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் என்றும் தெரிய வந்தது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தால் தமிழக அரசுக்கு உடனடியாக கூடுதலாக ரூ.7 ஆயிரம் கோடி தேவைப்படும் என்பதும் தெரிய வந்தது. இந்த தொகையை தற்போதுள்ள நிதி நெருக்கடி சூழ்நிலையில் கொடுக்க இயலுமா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

நிதிநிலையை கருத்தில் கொண்டு 58 வயதில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பாண்டு வழங்க ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இதை அரசு ஊழியர் சங்கத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என்பதில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

 

 

Tags :

Share via