மீரா மிதுன்.. தலைமறைவானதால் போலீசார் தேடுதல் வேட்டை?

by Editor / 13-08-2021 06:07:11pm
மீரா மிதுன்.. தலைமறைவானதால் போலீசார் தேடுதல் வேட்டை?

நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் தனது தொடக்க காலம் முதலே சர்ச்சைகளை கிளப்பி அதன்மூலம் தான் பிரபலமானார். ஆனால் அவரது அனுகுமுறையால் மாடலிங் துறையிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் குறித்தும், அவர்களுடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவரது ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் தலித் மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தலித் மக்கள் தான் மோசமானவர்கள் என்றும், அவர்கள் தான் குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்றும் பேசிய வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. மேலும் திரையுலகில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்து இயக்குனர்களை வெளியேற்ற வேண்டும் என்று மீரா மிதுன் பேசிய வீடியோவிற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. மதுரை, சென்னை, திருவள்ளூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் புகார் அளித்தனர்.

இது தொடர்பான புகாரில் சைபர் க்ரைம் போலீசார், கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via