ஆந்திராவில் திண்டுக்கல் பெண் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை

by Admin / 14-08-2021 01:41:22pm
ஆந்திராவில் திண்டுக்கல் பெண் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை

 

ஆந்திராவில் காதல் திருமணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹர்ஷிதா என்கிற சத்தியவாணி (வயது 32). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்பதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.
 
அப்போது மதனப்பள்ளி அடுத்த முனிபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.

காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெங்களூரில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கணவருக்கு தெரியாமல் ஹர்ஷிதா பெங்களூரிலிருந்து ஹரிபிரசாத்தின் சொந்த ஊரான முனிபள்ளிக்கு பைக்கில் வந்தார்.

இதுகுறித்து அவரது மாமனார் ஹரிபிரசாத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஹரிபிரசாத்தும் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஹர்ஷிதா பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்தார். இதில் தீ உடல் முழுவதும் பரவி எரிந்தது. வலியால் அலறி துடித்தார்.

இதனைக்கண்ட அவரது கணவர் ஹரிபிரசாத், ஹர்ஷிதாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஹரி பிரசாத்துக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மதனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்காயமடைந்த ஹரிபிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹர்ஷிதா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via