காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நீடித்து காணப்படுகின்றது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டம் பம்புரா என்ற பகுதியில் உள்ள ஹரவ் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :